Thursday 13 June 2013

ஈதொன்று கேட்பீர்



கம்மஞ் சோறுதான்
என்றாலும் கவலை இல்லை
கருவாட்டுக் குழம்புதான்
என்றாலும் கணக்காவதில்லை,
ஆனாலும்
ஒரு அகப்பை தான் கிடைக்கும்
நேரம் தவறினால்
அதுவும் கிடைக்காது
தம்பியிடம் சண்டையும் நிற்காது,
உழுகப்போன அப்பா
கொண்டு வரும் மீதிக் கஞ்சிக்காக
காத்திருப்பாள்
அவளுக்கான பங்கைப் பெறத் தாய்,
வரப்பில் வைத்த கஞ்சிச் சட்டியைத்
தட்டிவிட்டு பசிபோக்கும் காக்கைகள்
உழுகும் மாட்டின் முதுகில்
சவாரி செய்யத் தயாராகும்.
உழுத களைப்பில்
பசியாறத் திரும்பும் வியர்வை அருவிக்கு
கவிழ்ந்த சட்டியே மிச்சம்,
கஞ்சியில்
காக்கை வாயும்
கரிசக் காட்டு மண்ணும் வழிந்தோடும்
பசியாற சிந்திய கஞ்சியெடுத்து
ஊதிக் கொண்டிருக்கும்
நாவில் நீரற்ற உதடு,
வாய்க்கு எட்டிய புற்களை மேய்ந்து
காலிச் சட்டியை சுமந்து
வீடு திரும்பும்
உழுத காளைகளுக்கு முன்னே
நடக்கும் கலப்பை சுமந்த பசி,
மாடு அவிழ்த்துக் கட்டும் முன்
கஞ்சித் தண்ண்ணி கேட்டு
கொதிக்கும் வற்றிய குடல்,
வீட்டுக்குள்
தலைப்பாகை எடுத்து
உதறும் போது விழும்
ஏங்க மீதிக்கஞ்சி இருக்கா"
என்றவளின் பேச்சு.
*(ஏழைகள் அதிகம் சாப்பிடுவதால் விலை ஏறுகிறதென  உரையாற்றிய பிரணாப் முகர்ஜிக்கு சமர்ப்பனம்)

No comments:

Post a Comment