இதயத்தின் பக்க வாத்தியக் கவிதை
வீசிச் செல்லும் ஒவ்வொரு நிமிடமும்
பெரும் சுவர்க்க நிலையை அடைய வைக்கிறது
வெளியேறும் அழுக்கு வார்த்தைகள் தந்த மகிழ்வை
வெள்ளைச் சீர்களில் காணமுடியவில்லை
முடிவிலியாக நீளும் மனித மரணத்தின் சாவியை
ஒவ்வொரு நிமிடத்தின் பின்னிருக்கையும் கடந்துதான் வருகிறது
ஒவ்வொருவரின் கைகளிலும் மாறி மாறி
மனம்தான் என்னவோ ஒப்புக் கொள்ளவே செய்வதில்லை
பதுக்கி வைத்த பெரும் செல்வமாய் தெரிகிறது
உடனிருந்த வரை,
காலன் வந்து கேட்கிற போது
வரவு செலவு கணக்கின் கடைசி பக்கத்தை மட்டும்
கிழித்துக் கொண்டு அழுகிறோம்
எல்லோருமாக சேர்ந்து,
ரெக்கை முளைத்த உ யிரின்
பறத்தலைக் கண்டு மகிழாமல்
கூட்டுக்குள் அடக்கி வைப்பதை
சொந்தம் கொண்டாடுகிறோம்,
ஓர் உண்மையும் தெரியாமல்.
முடித்து வைக்க பிரயாணமாகும் வாழ்வில்
தொடங்கி வைக்கப் பிரயாணமாகும் வாழ்வென
வாசிக்கப் பழகுவோம் இதயத்தின் பக்க வாத்தியக் கவிதை,
மெல்லமெல்ல அதன் காட்டை நோக்கி பறக்கிறது
ரெக்கை முளைத்த உயிர்.