Sunday 29 September 2013

ரெக்கை முளைத்தது


இதயத்தின் பக்க வாத்தியக் கவிதை
வீசிச் செல்லும் ஒவ்வொரு நிமிடமும்
பெரும் சுவர்க்க நிலையை அடைய வைக்கிறது
வெளியேறும் அழுக்கு வார்த்தைகள் தந்த மகிழ்வை
வெள்ளைச் சீர்களில் காணமுடியவில்லை
முடிவிலியாக நீளும் மனித மரணத்தின் சாவியை
ஒவ்வொரு நிமிடத்தின் பின்னிருக்கையும் கடந்துதான் வருகிறது
ஒவ்வொருவரின் கைகளிலும் மாறி மாறி
மனம்தான் என்னவோ ஒப்புக் கொள்ளவே செய்வதில்லை
பதுக்கி வைத்த பெரும் செல்வமாய் தெரிகிறது
உடனிருந்த வரை,
காலன் வந்து கேட்கிற போது
வரவு செலவு கணக்கின் கடைசி பக்கத்தை மட்டும்
கிழித்துக் கொண்டு அழுகிறோம்
எல்லோருமாக சேர்ந்து,
ரெக்கை முளைத்த உ யிரின்
பறத்தலைக் கண்டு மகிழாமல்
கூட்டுக்குள் அடக்கி வைப்பதை
சொந்தம் கொண்டாடுகிறோம்,
ஓர் உண்மையும் தெரியாமல்.
முடித்து வைக்க பிரயாணமாகும் வாழ்வில்
தொடங்கி வைக்கப் பிரயாணமாகும் வாழ்வென
வாசிக்கப் பழகுவோம் இதயத்தின் பக்க வாத்தியக் கவிதை,
மெல்லமெல்ல அதன் காட்டை நோக்கி பறக்கிறது
ரெக்கை முளைத்த உயிர்.

Saturday 28 September 2013

என்னாச்சு இவளுக்கு


உன்னிடம்
மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
பதில் மொழிகள் கடலலையாய் மோதுகிறது
என் நெஞ்சில்,
உன் வீட்டில் சிறு சண்டையென்றால்
எனக்கு மிஸ் கால் கொடுத்து,
உன்னைப் பிடிக்கவில்லை
உன் முகம் பிடிக்கவில்லை
உன் குறுந்தகவல் பிடிக்கவில்லை
உன் செல்நம்பர் பிடிக்கவில்லை
உலகத்தில் எதுவுமே பிடிக்கவில்லை
சிறு நிமிடம் கூட தாமதிக்காமல்
சட்டென்று சொல்லிவிடுகிறாய்,
என்னாச்சு இவளுக்கென
ஏங்கிக் குதிக்கிறது விழியிலிருந்து கண்ணீர்
உனக்காக சேமித்து வைத்த ப்ரியங்கள் எல்லாவற்றையும்
நினைத்து நினைத்து.

யார்றா அந்தப் புள்ள


இதய மோதிரமான காதல்
உன்னிடம்
அடகு வைத்த பின் மீட்க முடியாதவனாய்
ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன்
இப்போது
யாரேனும் அலைபேசியில்
சராசரி பேச்சைக் கடந்து
சிலவை பேசத் தொடங்கினால்
பேச்சினூடாகவே
பழக்க தோஷத்தில்
உன் பெயரைச் சொல்லி
மாட்டிக் கொள்கிறேன்,
எல்லோரையும் போல கேட்டுவிட்டார்கள்
அம்மாவும் அப்பாவும்
யார்றா அந்தப் புள்ளை என்று,
சொல் பேச்சைக் கேக்க மாட்டுது
உன் கட்டளைக்கு அடங்காத
என் டார்ச்சர் பேச்சைப்போல,
அடுத்தவர் பேச்சினூடாக உன்பெயரை மறைப்பதில்
உன்நினைவில் ஊறிப்போன மனசு.

அக்கறைக் கவனங்கள்


மதுக் கடைப் பாரில்
குடிக்கிற பேச்சுகள்,
திறந்து வைத்த புட்டிகளாய்
குறைகின்றன
மனைவிமார்களின் மீது கொண்ட
பாசங்கள்,
ஒருவர் பேச்சை
ஒருவரும் கேட்பதில்லை
தள்ளாடிப்போன அவரவர் அக்கறைக் கவனங்கள், 

சரக்கூத்தாத நெகிழி குவளையைப் போல 
காற்றிலாடும் குடும்பக் கதை.

அன்புள்ள வங்கணைகாரி (சிநேகிதி)

திண்டிவனம் வீரமுத்து கோனார் மகள் நீ
இராமநாதபுரம் செல்லையா உழவர் மகன் நான்
அதிகாலை எழுந்ததும்
சாணி கரைத்துத்தான்
முற்றம் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள்
உங்க அம்மாவும் 
எங்க அம்மாவும் அன்றிலிருந்து இன்றுவரை,
பேத்திகளுக்காகவே காது வளர்த்த பாட்டிகள்
உங்க வீட்டோடு ஒண்ணு
எங்க வீட்டோடு ஒண்ணு.
உங்க வீட்டு செம்மறி ஆடும் ஒரு குட்டி போட்டுள்ளது
எங்கவீட்டு பசுமாடும்ஒரு கன்று போட்டுள்ளது போன மாசம்
எல்லாத்தையும் விட
நீயும் பனிரெண்டாம் வகுப்பு கணிதப்பிரிவு
நானும் பனிரெண்டாம் வகுப்பில் கணிதப்பிரிவு,
ரெண்டே ரெண்டு முறைதான் சந்திச்சிருக்கோம்
டி.என்.பி.எஸ்.சி க்கு விண்ணப்பிக்கும் போது
பாரிஸ் தபால் நிலையத்தில் மட்டும்,
நீ யாரோ
நான் யாரோ
எப்பிடியினும் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே
பேஸ்புக் யூசர்நேம் பாஸ்வேர்டு போல

Tuesday 23 July 2013

மனச் சலவை


பிழிந்து காயப்போட்ட ஞாயிற்றுக்கிழமை தினமொன்றில்
துவைத்து எடுத்தாள் அவளின் ஐநூத்திஒன் பேச்சால்
கள்ளச் சிரிப்பழகால்
நெஞ்சு சிறிது காமக்கறை படிய வைத்து,
அவளின் சர்ப் சிரிப்பால்
சலவை செய்தாள்,
அடித்துக் கும்மியதில்
அடிமையாக்கும் வன்ம நுரைகளை விழுங்கின
வழிந்தோடிய சோப்புத்தண்ணீர்,
அலசியெடுத்து உதறியதில்
தெறித்து விழுந்தன சில வக்கிரங்கள்,
அவளின் அயனிங் மனதால்
சடச்சடவென்று இருக்கிறது
எம் காதல்,
எம் ஞாபகக்குளத்தில்
அவள் விட்டெறிந்தது
கூழாங்கற்களா?
கோரைப் புற்களா?
விழுகின்ற ஒவ்வொரு நிமிடப் பொழுதும்
நினைவு வளையங்கள்
விரிவடைந்துகொன்டே போகின்றன

மண் குவிக்கும் வேர்கள்


சேதிகள் உறவாடும் ராத்திரி
தோழிகளின் பேச்சுகள் இடையே
அவரவர் வருகைக் காரணம்
முணுமுணுத்தன
படிக்க முடியாத நாக்குகள்-

அக்கா கல்யாணத்தால்தான்
படிக்கமுடியாமல்போனது
ஒருதோழிபேச்சாய்-

திடிரென அம்மா இறப்பு
படித்த அக்கா வீட்டுக்குத் துணையாக நிற்க
உடன் எனது பள்ளிக் கால்களும் நின்றன
மற்றொரு தோழி பெரு மூச்சாய்-

முட்டி முட்டி படித்தேன்
மர மண்டைக்கு ஒத்து வரலனு
சில தோழிகள் சலிப்பாய்-

ஒவ்வொருவராக சொல்லச் சொல்ல
கண்ணீரைக் கக்கின
முகில் கண்கள்-

சில பள்ளிச் சீருடைகள் விம்மின
பஞ்சாலைத் தோழிகளின் விடுதியில்,
விவரச் சேதிகள் தொடர
நடுநிசிகடந்து
இருள ஆரம்பித்தன கண்கள்.

வெளிச்சம் பெற அதிகாலை எழுந்து
தனக்கான வாழ்வை தானமைக்க,
கவனிக்க முடியாத நாற்றுகள்
கவனிக்கப் ப டாத வேர்கள்
மண்குவிக்க தயாராகின்றன.

Monday 22 July 2013

வெத்தலைக் கொட்டான்


பழமையான வீட்டுக்குரிய
தூண்கள் தாங்கிய
முதுமையான வீடு

வயதானதால் வாய்
அசைபோடவே
ஆசைப்படுகிறது

பக்கத்தில் எவர் போனாலும்
விரட்டியடிக்க குச்சியோடு
வெத்தலை இடிக்கும் கூன்,

திண்ணை முழுவதும்
குழந்தைகள் ஏறி இறங்கி
விளையாடும்விளையாட்டு
கிழவிக்குப் பயந்து
வருவதில்லை திண்ணைப் பக்கம்.

சாய்ந்தே இருந்தது
கிழவியின் எண்ணம்
குழந்தைகளை விரட்டியடிக்க
சுண்ணாம்பு வெத்தலை
கலிபாக்கு வாங்கிவரச் சொல்ல
கடவில் போவோரைப்
பார்த்துக் கொண்டிருக்கிறது.

எவரையும் காணாததால்
நடக்க ஆரம்பிக்கிறது
கடையை நோக்கி

திரும்பிவந்து பார்க்கயில்
வெத்தலைக் கொட்டான்
விளையாடிக் கொண்டிருந்தது
குழந்தைகளோடு

வாயில்
வெத்தலை போடவில்லை
சிவந்தது கிழவியின் இதயம்

கடவுள் நன்றி


மின்சாரம் நிறுத்தப்பட்டதும்
சரியாக வந்து விட்டார் கடவுள்
குழந்தைகளோடு விளையாட
துள்ளித் துள்ளிக் குதித்து
நன்றி சொல்கிறது
தெருவிளக்கு

Sunday 21 July 2013

பயப் பேய்


நல்லா நினைவிருக்கிறது
எனக்கு
நடுநிசி கடந்த பொழுது அது
எல்லோரும் தூங்கியதற்குச் சான்றாய்
குறட்டை ஒலி,
ஊரெல்லையில் ராமாயி வீட்டு நாயின் குரல்
தூரத்தில் கேட்கிறது,
இரண்டாம் சாம வேளை கடந்ததிற்கு அடையாளமாய்
மேலத்தெரு முத்திருளன்
வைக்கோல் போடுகிறபடியால்
எழுந்து நிற்கும் மாட்டு மணியோசை சப்தம்,
இடுகாட்டை விட்டு
அந்தப் பொழுதில்தான்
செத்துப்போன கருப்பாயி பழஞ்சிறையா ,கிழவன்,
காளையம்மாத்தா, எருமைக்காரி அழகுமலை எல்லோரும் ஊருக்குள் வருவதாய்
அஞ்சு வயசுல அப்பத்தா சொன்ன பேய்க் கதைகள்
நினைவில் அலைகிறது,
தனிமைப் பேய் பிடித்து கதவின் துவாரத்திலிருந்து தெருவைப்பார்க்கும் அந்த இரவில் பயமில்லாமல்
இரை பொறுக்கிக் கொண்டிருந்தன
நடுரோட்டு மின்கம்ப விளக்கடியில் எலிகள்

இம்சை செய்


நீர் தூங்கும் பூமெத்தையான
ஈரக்காலைப் பொழுதில்,
பிரிவின் வலியை சொன்னாலும்
புரியாத குறுந்தோகை மயிலாட்டம்
குடுகுடுக்கிறாய் அன்பே,
நளினமான புன்னகையோடு கூடிய
பேச்சை என்னிடம் பேச எப்படியடி
மன்மதக்கணை தொடுக்க கற்றுக்கொண்டாய்,
உனக்குபிடித்த நாய்க்குட்டிகள்,கன்றுக் குட்டிகள்
கக்கத்தில் தூக்கிதொளுவத்தில் விட்ட தைப்போல
மகிழ்ச்சியில் துள்ளிக் கொள்கிறது
அவ்வப்போது உன்னோடு உரையாடும் பொழுதின் மனம்,
அம்மாவிடம் என்ன வசியம் செய்தாயடி பெண்ணே
அடிக்கடி கேட்க ஆரம்பித்துவிட்டாள் உன்நலம் பற்றி
உன் வேலைப் பளுவால் பேசாக்காலங்கள்
நெஞ்சுக்குள் குத்தவைத்துக்கொண்டு
குறிகேட்க ஆரம்பித்துவிடுகிறது
மீண்டும் எப்போது அவளிடம் பேசுவாய் என்று
காலையில் பரபரப்பாகி
மாலையில் ஓய்ந்துகிடக்கும்
கிராமத்து ஒத்தையடி பாதையாய் பரிதவிக்கிறது
நாள் தள்ளிக்கொண்டு போகும் இடைவெளியால்
அன்பே வா வா
அனுதினமும் இம்சை செய்
இப்போதும் அப்படித்தான் செய்யினும்
இன்னும்கூடுதலாய் இம்சை செய்யடி
உன் இம்சையே எனை இருக்கிப்போடட்டும்
இந்த ஜென்மம் முழுவதும்....  

Friday 19 July 2013

கவிப்பேரரசு வைரமுத்து உடன்

                                 என்னை வசீகரிக்காத கவிஞரான வைரமுத்து அவர்கள் மீது இன்று அவரின் மாந்த நேயப் பண்பைக் கண்டு, அவரின் மீதான மதிப்பு உயர்ந்தது, எம் கவித்தகப்பன் வாலி அய்யா பூவுடல் ஊர்வலத்தில் பின் சென்றோம், புறப்பட்ட பின் எதிர்வயப்பட்ட திரு.வரைமுத்து அவர்கள் புறப்பட்ட வாகனத்தை நிறுத்தாது போகச் சொல்லிட்டு, கற்பகம் நிழற்சாலையில் வந்து செருகினார், அங்கிருந்து வருத்தத்தை நெஞ்சுக்குள் முடிச்சிட்டுக் கொண்டார் போல, எம் ஆர் சி நெடுஞ்சாலையில் வாகனம் கடக்க கடக்க அவிழத்துவங்கியது, கைக்குட்டை நனைத்துக் கொண்டது, சில சமயம் ஏக்கப் பெரு மூச்சொறிந்தார், நடந்து கொண்டே போகினோம், பாலம் கடந்த பின்னும் வானம் நோக்கி இட வலமாக திரும்பிப் பார்த்தபடியே நடக்கத் துவங்கினார்,எந்த எந்த இடமென்று பார்வைக் குறிப்பொடு தலையசைத்துக் கொண்டு, வாலித்தமிழ் இல்லத்தின் தூரம் அதிகரிக்க அதிகரிக்க மழையழத்துலங்கியது, வானத்தின் போதிநீர்த்திவலைகள் கவிஞர் வைரமுத்துவின் ஆடை துளைத்துக் கருத்த யாக்கை நனைக்க நனைக்க உதவியாளர்" அய்யா வாகனத்தில் ஏறளாமானு வினவினார்" வேண்டாமென்று பெருங்குணத்தால் நிராகரித்தார், மயானம் நெருங்க நெருங்க மிக உக்கிரமாக அழத்துலங்கியது கவிதை பிடித்த வானம், சாலையில் சாக்கடை யோடு நிரம்ப நீரில் கால் நனைத்து நடந்தேகினார் வீறு குன்றாது,பின்னால் சில அரசியல் சாக்கடைகள் வேட்டியைத் தூக்கிக் கொண்டன, அந்த இடம் கவிஞரின் ஆடைமீது கவனம் கொள்ளாது, ஒரு வாக்கியம் சொன்னார்"கவிஞர் முகத்தில் தூறல் விழாமல் பார்த்துக்கோங்கவென்று" மேலும் அழத்துவங்கினேன் மவுனம் உடைத்து, பெசண்ட் நகர் மின் மயானம் வந்தடைந்தது. கவிஞர் வைரமுத்து அவர்களின்இந்தக்குணம்எம்மை அவர்மீது உயர்வான மரியாதைச் செலுத்த வைத்துவிட்டது.
மகோரா (எம்.ஜி.ஆர்) இறுதி ஊர்வலத்தில் இப்படி நெடுந்தூரம் கவியரசு கண்ணதாசன் நடந்ததாக கேள்வி, இன்று கவிதை வங்கி வாலிக்கு கவிப்பேரரசு வைரமுத்து,
கவியரசு கண்ணதாசனைப் பார்க்கப் போயிட்டார் திரைப்பாட்டு மார்க்கண்டேயர் வாலி அய்யா,  

என் கிராமத்துல நான்



Saturday 22 June 2013

மண்வாசம்


திடீர்
உன் வருகை
வெப்பச் சலனத்தால்
பெய்த மழையைப் போல பரவுகிறது
மண்வாசம் வீடெங்கும்.

அறுபடாத கொடியின் நஞ்சுப் பக்கங்கள்.... தாயின் வாயில் சேயின் உயிர்...

தலைமுறைப் பஞ்சம் தலை விரித்து
தரை மண் புழுதியான காலம்,
காலாரா நோய் குத்தகைக்கு எடுத்த
கொலைப் பசிக் கிராமம்,
கோரைப் புல்லால் மேய்ந்த குடிசையில்
கணவன் அப்பனோடு வயிறு வற்றிய கர்ப்பிணி,
கரட்டுக்காட்டு வரப்புகளில்
அன்றாடப் பசி தகிக்க கிழங்கு பறிக்கப் போனதில்
மாமன் இறந்த செய்தியொட்டி புருஷனின் கைகளில்
ஒன்றிரண்டு கொட்டுக் கிழங்குகள்,
பச்சத் தண்ணீர் பசியாற்றி
அரைத் தூக்கம் கழிந்தது அற்றைய நாளில்,
மறு தினம்
கத்தாழைக் காட்டுப் பகுதியில்
இரை தேடிச் சென்ற தாலியின் கால்கள் திரும்பவேயில்லை,
வழக்கத்துக்கு மாறாய் அந்நாளில்
வெறித்துக் காஞ்ச வானத்தில் வட்டமிட்டபடி
காகக் கூட்டமும், மகிழ்ச்சிப் பருந்துகளும்.
இரவைக் கவிழ்த்தி, பகலை அணைக்கிற சூரியன் கடந்த
அடுத்த கணம் வீட்டுக்குள் வலியோடு
வயிற்று நெருப்பிலிருந்து ஒரு கதறல் ஒலி
யாருமில்லா ஊர்களில் ஏகப் பரவுகிறது,
ஊரைத்தின்ற பசி காண மெல்ல திறக்கிறது
நஞ்சுக் கொடி அறுபடாமல் பச்சிளம் கண்,
தாய்மையின் உலக வழக்கத்தை எட்டி உதைந்துவிட்டு
பஞ்சத்தின் பசியில்
கழுகாகிறாள் தாய்,
ஈன்ற வயிற்றுக் கோரப் பசியால்
பிய்க்கிறாள் இரண்டு கைகளில்,
குடிசையை விட்டு வெளியேறத் துடிக்கிற
அந்தத் தலைமுறைப் பஞ்சத்தின்
கடைசி உயிரின் வயிற்றை....

Thursday 13 June 2013

தாம்பத்திய தர்மம்.


ரகசியம் கசியும் படுக்கை அறையில்
கட்டி உருளும் ஒதுக்கப்பட்ட காலம்
வருந்தாச் சிரிப்பில் நனையும்
உன்னுடம்பும் என்னுடம்பும்
விடிந்த பின்னும் வெட்கத்தில் அசைகிறது
தாம்பத்திய தர்மம்.

பிரதிப் புன்னகை


பிரதி எடுக்காத அவளின் புன்னகையிடம் இருந்து
கடன் வாங்கினால்,
ஒரு நாட்டிற்கான வெளிச்சத்தை கொடுக்கிறாள்
அவளின் தலை உலர்த்தலில்,
மிக நெருங்கிய கனம்
மௌனத்தைத் தந்தவள்,
விரிவான உரையாடல் ஆகிப் போகிறாள்,
தனித்திருக்க என்னை விட்டுச் சென்ற நாட்களில்.

-------------------------------------------
When I Received the credit from the
Non-copied smile of my beauty
She gave radiance for the country
In the drying process of her hai
She gave the silence
Of the most intimate moment.
She became a comprehensive conversation
When she left me alone on the day.

-தமிழில்:முகவை வாலிதாசன்
-ஆங்கிலத்தில்:சேலம் ச.கோபிநாத்

பஞ்சாயத்து ஞாபகம்


கோவம்கோவமா வருது
ஊரணிக்கரை மீது,
கண்கொட்டாமல்
நேரே நின்று பார்க்கிறது
நீராடும் அவள் அழகை,
மறைந்திருந்துப் பார்த்த என்னைத்தான் ஏசி
பஞ்சாயத்தைக்கூட்டி அவமானப்படுத்துகிறாய்
ஓர வஞ்சனைக்காரி,
மறக்கவே இல்லை
இன்னும்
அவளும் நானும்,
சிறுசிறு ஊடலின் போது
பேசா நொடிப்பொழுதுகளில்
சொல்லிச் சொல்லி
மீண்டும் மீண்டும்
புதுவாழ்க்கைக்கு அழைத்துச்செல்கிறது
அவமானப்படுத்திய அவளின் பஞ்சாயத்து ஞாபகம்.......

நனையாப் பக்கங்கள்


அம்மா சொல்லும் பேய்க்கதைகளில்
அலறவைத்துவிடும் நடுச் சாமங்களில்,
"அம்மா அண்ணன் மோன்டுட்டான்
பாவாடையில மூத்திற நாத்தமென்று"
காலை எழுகையில்
தங்கச்சி சத்தம்போட்டு கூப்பாடுபோடுவா ,
சும்மா இருக்கமாட்டாள்
 கேதாற வீட்டுக்குப் போயிட்டு வந்த அம்மா,
பிணமாகிப்போன பக்கத்துத்தெரு
பெரியாத்தாவக் கட்டிப் பிடித்து
மூக்குச்சளியை முந்தானையில் நனைத்து
அழுதுவிட்டு வந்த அன்றிரவு ,
உணவுண்ட பின் நிலா முற்றக் கதையிலே
இறந்த பெரியாத்தா நினைவைப்
பேசுறதக் கேட்ட இரவு தினத்தில்
நனைய ஆரம்பித்திடும் மூத்திர இரவு,
அப்படி பல நடக்கும் ,
இப்ப கார்ட்டூனுக்குள் மையம் கொள்கிறது
மழலை இதயம்,
அம்மா சேலை, அப்பா வேட்டி நனைத்து
காலையில் திட்டிக்கொண்டே
கசக்கிய காலம் பொற்காலம் தானே,
நனையா பக்கங்கள்
நெஞ்சில் ஏராளம்தானே எல்லோருக்கும்

தாவி வரும் ஜன்னல்


தினமும் அப்பாவிடம்
அம்மா சண்டை
அடகு வைத்ததை மீட்டுத் தரச் சொல்லி,

கொஞ்ச நாள் பொறு
அறுவடை முடிந்ததும்
மீட்டிரலாமென அமைதிப்படுத்தும் அப்பா

நகரத்துக்குப் படிக்கப்போன
அக்கா
பெரிய மனுஷியாகி
தோழிகளுடன் வந்து கொண்டிருப்பதாய்
பூப்படைகிறது வீடு,

மஞ்சள் பூசுகிறது
தெருவோரத்தில்
போகிறபோக்கிலே
வீசி விட்டு சென்றவளின்பேச்சு,

அறுவடை அமோகம்
சந்தோஷமாக இல்லத்தில்
மாமாவின் குடும்பத்தினர்

நீராட்டு முடிந்து
திரும்புகிறது வெம்மைக் காற்று
பள்ளிக்குச் சென்று விட்டாள் அக்கா

ஆரம்பமானது மீண்டும்
அடிக்கடி அப்பாவிடம் அம்மா சண்டை
அடகு வைத்ததை மீட்டுத் தரச் சொல்லி

ஈதொன்று கேட்பீர்



கம்மஞ் சோறுதான்
என்றாலும் கவலை இல்லை
கருவாட்டுக் குழம்புதான்
என்றாலும் கணக்காவதில்லை,
ஆனாலும்
ஒரு அகப்பை தான் கிடைக்கும்
நேரம் தவறினால்
அதுவும் கிடைக்காது
தம்பியிடம் சண்டையும் நிற்காது,
உழுகப்போன அப்பா
கொண்டு வரும் மீதிக் கஞ்சிக்காக
காத்திருப்பாள்
அவளுக்கான பங்கைப் பெறத் தாய்,
வரப்பில் வைத்த கஞ்சிச் சட்டியைத்
தட்டிவிட்டு பசிபோக்கும் காக்கைகள்
உழுகும் மாட்டின் முதுகில்
சவாரி செய்யத் தயாராகும்.
உழுத களைப்பில்
பசியாறத் திரும்பும் வியர்வை அருவிக்கு
கவிழ்ந்த சட்டியே மிச்சம்,
கஞ்சியில்
காக்கை வாயும்
கரிசக் காட்டு மண்ணும் வழிந்தோடும்
பசியாற சிந்திய கஞ்சியெடுத்து
ஊதிக் கொண்டிருக்கும்
நாவில் நீரற்ற உதடு,
வாய்க்கு எட்டிய புற்களை மேய்ந்து
காலிச் சட்டியை சுமந்து
வீடு திரும்பும்
உழுத காளைகளுக்கு முன்னே
நடக்கும் கலப்பை சுமந்த பசி,
மாடு அவிழ்த்துக் கட்டும் முன்
கஞ்சித் தண்ண்ணி கேட்டு
கொதிக்கும் வற்றிய குடல்,
வீட்டுக்குள்
தலைப்பாகை எடுத்து
உதறும் போது விழும்
ஏங்க மீதிக்கஞ்சி இருக்கா"
என்றவளின் பேச்சு.
*(ஏழைகள் அதிகம் சாப்பிடுவதால் விலை ஏறுகிறதென  உரையாற்றிய பிரணாப் முகர்ஜிக்கு சமர்ப்பனம்)

Sunday 2 June 2013

வீட்டுப்பாடம்




வாசலுக்கு வந்து கிடந்தன
வயிறு மெலிந்த
சமையல் பாத்திரங்கள்
அடகு வைத்தவை போக
பூட்டப்படாத வீடு
கழற்றி வீசப்பட்டுக் கிடந்தது
மானத்தை இழந்த வாசல்,
பாத்திரம் தேய்க்கப் போன 
தங்கச்சித் துணிமணிகள்
கொம்பின்றிக் கொடி பிடித்தன
வீட்டு முற்றத்தில்-
மூலையில்  ஒதுங்கி  இருந்தது
அதட்டலுக்கு
அக்காவின் பயம்,
தாய் கோபித்துக்கொண்டுபோனதை
பக்கத்துத் தெருவிலிருந்து
பாட்டி சத்தம்
அசிங்க அசிங்கமா சொன்னது,
எட்டி உதஞ்ச தண்ணீர்க் குடமோ
ஏனோ தானமாய்.
கைலி அவிழ்ந்து கிடந்த
தந்தை அருகில் 
மதுப்பாட்டில் உசாரற்று-
முதுகில் புத்தகப் பாரத்தோடு
பார்க்கும் போது  
நினைவு வந்தது
ஜோதி டீச்சரின் வீட்டுப்பாடம்.

Friday 31 May 2013

நடுவுல கொஞ்ச பக்கத்தக் காணோம்


இருபது வயதுக்குவந்த
ஒவ்வொருவரும்
அவர்களுக்கு வருகின்ற
பருவப் பிரச்சினையை
மறைக்கின்றதைப் போலக்
கூச்சப்பட்டிருக்கும்
அந்த மேல் நிலைப் பள்ளி,

விழா மேடையில்
ஜனவரி26 இன்றென
சுதந்திரதினத்தன்று
மாற்றிச்சொன்ன பேச்சி,

பள்ளி
கலை நிகழ்ச்சிகளுக்கு
பெண்வேடம் போடும் சரவணன்,

செல்போனில் நண்பர்களுக்கு
பெண்களைப்போல
பேசச் சொல்லி
உசுப் பே த்தும் பலகுரல் ராஜேஷ்.

ஒரே நிறங்களில்
சேலை , சடைமாட்டி, பூ, செறுப்பு, அணிந்து
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களோடு
சிரித்து சிரித்து பேசும் பிரியங்கா டீச்சர்.

தினமும்
முதல் பாடவேளையில்
வருகைப் பதிவேடு சுமந்து வரும்
விஜிதா அக்கா,

பெளதிக வகுப்பு
இடையிடையே அதான்டா போட்டு பேசும்
குண்டு வாத்தியார்,

இண்டர்வல் நேரத்தில்
எறும்புபோல போகச் சொல்லி
விசிலும் கம்புமாக கத்திக்கிட்டுத்திரியும்
சொட்டை பி.டி. சார்.

ஏழாம் வகுப்பு
ஸ்டெல்லா டீச்சருக்கு
லவ்லெட்டர் கொடுத்து
ஹெட்மாஸ்டரிடம் மாட்டிக்கிட்ட
தமிழய்யா பாரதி,

இப்படி
பள்ளிக் கால ஞாபகப்புத்தகத்தில்
நடுவுல சில பக்கங்கள்
காணாமல் போகின்றன
காலச்சுழியில்,

நினைவில் நின்ற சில பக்கங்கள் மட்டும்
சந்திக்கின்ற வேலைகளில்
அவசர வாசிப்பை நடத்தி
மகிழ்கின்ற போது
கடந்தகால மகிழ்ச்சியில்
பள்ளிச் சிறுவர்களாகி
ஓட ஆரம்பிக்கிறது நெஞ்சில்,

கருவேல மரம் சூழ்ந்து
நினைவுகள் இடிந்த
கரும்பலகைப் பள்ளிக்கூடம்,
துருபிடித்த கொடி மரம் மட்டும்
எதையோ சொல்வதைப் போலிருந்தது
அவ்வழியே ஊர்க் கோவில்கொடைக்கு
காரில் போகின்ற போது.

முதல் மரியாதை


வேகங்கள் ஊரும் 
முருங்கை மரநிழலில் 
வெக்கை ஒடிய 
ஒதுங்கி களைப்பாறுகிறது 
கொம்பைப்பறித்த முதுமை, 
செறுப்பில்லாமல் நடந்த 
இளமைக்கு பூச்சொறியும் 
காற்றால் மயக்கமுண்ட 
முருங்கைப்பூ