Sunday, 21 July 2013

பயப் பேய்


நல்லா நினைவிருக்கிறது
எனக்கு
நடுநிசி கடந்த பொழுது அது
எல்லோரும் தூங்கியதற்குச் சான்றாய்
குறட்டை ஒலி,
ஊரெல்லையில் ராமாயி வீட்டு நாயின் குரல்
தூரத்தில் கேட்கிறது,
இரண்டாம் சாம வேளை கடந்ததிற்கு அடையாளமாய்
மேலத்தெரு முத்திருளன்
வைக்கோல் போடுகிறபடியால்
எழுந்து நிற்கும் மாட்டு மணியோசை சப்தம்,
இடுகாட்டை விட்டு
அந்தப் பொழுதில்தான்
செத்துப்போன கருப்பாயி பழஞ்சிறையா ,கிழவன்,
காளையம்மாத்தா, எருமைக்காரி அழகுமலை எல்லோரும் ஊருக்குள் வருவதாய்
அஞ்சு வயசுல அப்பத்தா சொன்ன பேய்க் கதைகள்
நினைவில் அலைகிறது,
தனிமைப் பேய் பிடித்து கதவின் துவாரத்திலிருந்து தெருவைப்பார்க்கும் அந்த இரவில் பயமில்லாமல்
இரை பொறுக்கிக் கொண்டிருந்தன
நடுரோட்டு மின்கம்ப விளக்கடியில் எலிகள்

No comments:

Post a Comment