இந்தச் செய்தியை காதில் வாங்கி மனதுக்குள் போடும் போதேஉள்ளுக்குள் ஒரு வரலாறு காலச்சிறகுகளை விரித்துப் பறந்தது, வாசித்துப் பாருங்கள், உங்களுக்கும் அந்த வரலாறு காலச்சிறகை விரிக்கும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தென்னாப்பிரிக்காவிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார்கள் புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்கள்!
புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்கள்?
ஆமாம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அதிகாலை தென்னாப்பிரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள், முத்துகிருஷ்ணன் மரிமா ஆகிய இருவரும். தங்களது பரம்பரையே பார்த்திராத கிராமத்தைப் பார்ப்பதற்காக, இங்கே பொங்கல் வைப்பதற்காக, வந்திறங்கிய இருவரின் பின்னணியைச் சொன்னால் இந்த பூமிப் பந்து எவ்வளவு சிறியது என்று நம்மால் யூகிக்க முடியும்.
இவர்களின் வரலாற்றை ஆச்சரியம் நுரைக்க நுரைக்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சென்னை மாங்காடு முத்துக்குமரன் கல்லூரியில் வணிகவியல் உதவிப் பேராசிரியராக இருக்கும் டி.கே.பரணிதரன்.
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி என்னும் சிறு கிராமம் தான் இவரது ஊர், அதிகாலை தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த முத்துகிருஷ்ணன் மரிமா ஆகியோரின் தாத்தாக்கள் இதே மருத்துவாம்பாடியிலிருந்துதான் தென்னாப்பிரிக்கா போயிருக்கார்கள்.
அதற்கு கிட்டத்தட்ட 150 வருடங்கள் முன்பு கப்பலில் சென்றவர்கள், தன் தாத்தாக்களின் பூர்வீக மண்ணைத் தேடி விமானத்தில் மீனம்பாக்கம் வந்து இறங்கிய கதை மிக சுவாரஸ்யமானது.
அது 1894...
ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியா பல ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அப்போது தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் ஆங்கிலேயர்.
அங்கே ஏராளமான கரும்புத் தோட்டங்கள், தங்கச் சுரங்கங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தன.அவற்றில் வேலை செய்ய தென்னாப்பிரிக்காவில் போதுமான மனித சக்தி இல்லை, பிறகென்ன நமக்குத்தான் ஏராளமான அடிமைகள் இந்தியாவில் இருக்கிறார்காளே என்று நினைத்தவர்கள், இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக ஆட்களை ஏற்றி தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பினார்கள்.
அதற்காக ஜில்லா ஜில்லாவாய் போய் கிராமம் கிராமமாய் ஆள் எடுத்தார்கள். அப்படித்தான் திருவண்ணாமலை மாவட்டம் அருகே இருக்கும் மருத்துவாம்பாடி கிராமத்துக்கும் சென்றார்கள் ஆங்கிலேய அதிகாரிகள், அங்கே அப்போது மொத்தம் சுமார் 42 குடும்பத்தினர் இருந்தனர்.
அவர்களிடம் ஆங்கிலேய அதிகாரிகளின் தூதுவரான தமிழர் பேடினார்.
இங்க பாருங்க நம்ம ராஜாங்கத்துக்கு சொந்தமா கடல் கடந்த தேசத்துல நிறைய வேலை இருக்கு. கரும்பு வயல்ல வேலை செய்யனும். கூலி நல்லா கொடுப்பாங்க அது மட்டுமல்ல அஞ்சு வருஷம் கழிச்சு நீங்க எவ்வளவு நிலத்துல வேலை செய்றீங்களோ அந்த நிலத்தை உங்களுக்கே கொடுத்துடுவாங்க இதெல்லாம் எப்போதாவதுதான் வரும்.
அந்த அறிவிப்பைக் கேட்டு மருத்துவாம்பாடி கிராமத்திலிருந்து 21 குடும்பத்தினர் கப்பலேற முடிவு செய்தனர்.
இந்த ஊர் மட்டுமல்ல இதுபோல தமிழ்நாட்டின் பற்பல ஊர்களில் தண்டோரா போட்டும் மிரட்டியும் ஆங்கிலேயர்கள் ஐம்பதாயிரம் பேரைத் திரட்டினார்கள்.
எல்லோரும் வண்டி வண்டியாக சென்னை செயின் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே எல்லோரிடமும் கைநாட்டு வாங்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றப்பட்டனர்.
பிறந்து வளர்ந்த தாய் மண்ணை இனி கண்களால் காணமுடியாது என்று தெரிந்தும் கண்களில் தாரை தாரையாய் அழுகைவரிகளை எழுதிக்கொண்டு கப்பல்ஏறினார்கள்.எங்கே போகிறோம்,எந்தத் திசையில் போகிறோம், அங்கே என்ன மொழிப்பேசுவார்கள்? அங்கே என்ன பாடுபடப் போகிறோம்? பல கேள்விக்குறிகளை சுமந்து கொண்டு அந்தக் கப்பல் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டது.
அப்படி மருத்துவாம்பாடியிலிருந்து தன் மனைவி, முருகா,ராஜா என்ற இரண்டு மகன்களை விட்டுவிட்டு பஞ்சம் பிழைப்பதற்காக அந்தக் கப்பலில் ஏறியவர்கள்தான் பச்சமுத்து.
ஆங்கிலேயர்களிடம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம்..... தாங்கள் மீது பிற்காலத்தில் பாதகமான எண்ணத்தை தோற்றுவிக்கும் என்று தெரிந்தாலும் அதை ஆவணங்களாக பதிவு செய்வதுதான்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் எத்தனை பேரை தென்னாப்பிரிக்காவுக்குக் கூட்டிச் செல்கிறோம்.அவர்கள் ஜில்லா என்ன? ஊர் என்ன?பெயர், சாதி என்று அத்தனை விவரங்களையும் அவர்கள் ஆவணமாக்கி அந்த ஆவணத்தை தென்னாப்பிரிக்காவுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அங்கே கரும்புத் தோட்டங்களிலும் தங்கச் சுரங்கங்களிலும் கூலி அடிமைக்களாக களமிறக்கப்பட்டனர் தமிழர்கள். ஐந்து வருடங்களில் நிலம் சொந்தம் என்று கூறி கூட்டிச் செல்லப்பட்டவர்களில் பலர் ஐந்து வருடங்களில் உயிரோடு இருக்கவில்லை. காரணம் கரும்புத்தோட்ட முதலாளிகளின் சித்திரவதைகள்.
அவர்களில் தப்பிப் பிழைத்த பச்சமுத்துவுக்கு ஆங்கிலேயர்களின் சித்திரவதையைவிட கொடுமையாக இருந்தது தன் மனைவி மகன்களைப் பிரிந்த வலி.ஆயினும் ஊருக்குத் திரும்புகிறோம் என்று கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாதகாலம்.
அதனால் அங்கேயே இருந்த ஒரு பூர்வீகத தமிழ்ப் பெண்ணைத்திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டும் ஆண், மூத்த பையனுக்கு முருகா, சின்ன பையனுக்கு ராஜா என்று தன் முதல் மனைவியின் மகன்களுக்கு வைத்த பெயரையே அவர்களுக்கும் வைத்தார். விதியின் சக்கரத்தில் பூட்டிய வண்டியாய் அவரது வாழ்க்கை ஓடியது.
1910-ம் ஆண்டு மருத்துவாம்பாடி கிராமத்தில் இருக்கும் செயிண்ட் மேரிஸ் பள்ளியின் ஆசிரியர், அந்த ஊரிலிருந்து தென்னாப்பிரிக்கவுக்குப் போன பச்சமுத்துவுக்குக் கடிதம் எழுதுகிறார்.அப்போது அவரது பையனிடமும், உங்கப்பாவுக்கு ஏதாவது எழுதனும்னா இந்தா எழுது என்று சொல்லியிருக்கிறார்.
முருகா தன் அப்பா பச்சமுத்துவுக்கு அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறான்...
தேவரீர் அப்பாவுக்கு எங்களை அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே நாங்கள் அனாதை என்று கருதி ஆசிரியர்தான் புத்தகங்கள் இலவசமாகத் தருகிறார் என்று உருகியிருந்தான் அந்தச் சிறுவன். இதுபோல பல கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
1910-ல் முருகா எழுதிய அந்தக் கடிதங்கள்தான், நூற்று மூன்றாவது வருடம் அந்த பரம்பரையின் மிச்சங்கள் தங்கள் சொந்த ஊருக்கு வர உதவியிருக்கிறது.
பச்சமுத்து வயதாகிப் போய் தென்னாப்பிரிக்காவிலேயே இறந்துவிட அவரது மகன் எழுதிய கடிதங்களை அவரது வாரிசுகளும், இதே கிராமத்திலிருந்து போனவர்களின் வாரிசுகளும் ஒரு பூஜைப் பொருள் போல பாதுகாத்து வந்தனர்.
சில வருடங்களாகவே பச்சமுத்துவின் பேரன் முத்துகிருஷ்ணன் தன் தாத்தாவுக்கு எழுதப்பட்ட கடிதங்களை அடிக்கடி பார்த்தபடி இருந்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் மருத்துவாம்பாடி முகவரி தெளிவாக இருந்திருக்கிறது.
தன் தாத்தாவின் ஊர் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் தென்னாப்பிரிக்காவில் பெயரில் மட்டும் தமிழுடன் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் முத்துக்கிருஷ்ணனும் ஒருவர். அவருக்கு தமிழ் அவ்வளவாக பேசத் தெரியாது, எழுதத் தெரியாது ஆனால் பெயர் முத்துக்கிருஷ்ணன் எல்லாமே ஆங்கிலமும் தென்னாப்பிரிக்க மொழியும்தான் நூறாண்டுகளாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த பரம்பரையாயிற்றே.
தன் தாத்தாவுக்கு அவரது சொந்த ஊரிலிருந்து வந்த கடிதத்தில் இருந்த அந்த முகவரியை ஆங்கிலத்தில் கூகுளில் டைப் செய்து தேடியிருக்கிறார். கூகுள் மேப் மூலம் அது எங்கிருக்கிறது என்று தேடியிருக்கிறார். அப்படித்தான் மருத்துவாம்பாடியைக் கண்டுபிடித்திருக்கிறார்.
அட அடுத்த சில நாட்களில் அதாவது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னைக்கு விமானம் பிடித்து வந்திறங்கி, டாக்ஸி பிடித்து திருவண்ணாமலை போய் பல பேரிடம் கேட்டுக் கேட்டு மருத்துவாம்பாடி சென்றுவிட்டார்.
அவருக்குத் தமிழ்த் தெரியவில்லை அவர் பார்த்த கிராமத்தினருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ”இதுதான் என் சொந்த ஊர்” என்று அந்தத் தமிழ் பேச முடியாத தமிழனின் மனம் ஆனந்தக் கூத்தாடியது.ஆனால் தன் தாத்தா, அவர் அப்பா யார் என்று தனது தாய் மண்ணை மிதித்தும் விபரம் கிடைக்கவில்லை அவருக்கு. ஊரில் பலரிடமும் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்து ஆங்கிலத்தில் தன்னை தொடர்புகொள்ளுமாறு சொல்லிவிட்டுக் கண்ணீரோடு சென்றுவிட்டார்.
இந்த நிலையில்தான்.. மாங்காட்டில் கல்லூரிப் பேராசியராக இருக்கும் பரணிதரன் தன் சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போக ஊர்ப் பெரியவர்கள், முத்துக்கிருஷ்ணனின் விசிட்டிங் கார்டைக் கொடுத்து அவர் வந்து போனதைச் சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு அடுத்து பரணிதரனுக்கும்,முத்துக்கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த பரஸ்பர இ மெயில் உரையாடல்களில்தான் இந்த நூற்றைம்பது வருட பாரம்பரியம் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறது.
அதன் கிளைமாக்ஸாகத்தான் நூற்றைம்பது வருடங்களுக்கு முன் தன் தாத்தா கொத்தடிமையாக புறப்பட்ட தனது சொந்தக்கிராமத்துக்கு பொங்கல் கொண்டாட தனது மனைவி மரிமாவோடு வந்திருக்கிறார் முத்துக்கிருஷ்ணன். மாரியம்மா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் மரிமா என்று மருவிவிட்டதாம்!
இவர்களை மருத்துவாம்பாடி கிராமமே கண்ணீரோடும் பெருமிதத்தோடும் காத்திருந்து வரவேற்றிருக்கிறது!
அட கொத்தடிமையாக ஏற்றி அனுப்பப்பட்ட ஐம்பதாயிரம் தமிழர்களில் இப்போது ஓரிருவர்தாம் தாய் மண்ணைத் தேடிக் கண்டுபிடித்து முத்தம் கொடுத்து பக்கத்திலிருக்கும் வேட்டவலம் அம்மனுக்குப் பொங்கலிடுகின்றனர். மிச்சமிருக்கும் தமிழர்கள் உலகின் எங்கெங்கோ என்னென்னவோ மொழி பேசிக்கொண்டே இருக்கிறார்கள்!.
ஒவ்வொரு தமிழனும் தன் பாரம்பரியத்தைத் தேடிச் செல்ல முத்துக்கிருஷ்ணனும் மரிமாவும் கண்முன் நிற்கும் உதாரணம்!
வாருங்கள் சொந்தங்களே, உங்களைத் தமிழ்நாடு வரலாற்றுத் தழும்போடு வரவேற்கிறது.
-நன்றி:தமிழக அரசியல்-
09-01-2013