முதன்முதலாக வாலிதாசன் இரங்கற்பா பாடியது
----------------------------------------------------
பாட்டுச்சக்கரவர்த்தி டி.எம்.எஸ்.க்கு
=======================
----------------------------------------------------
பாட்டுச்சக்கரவர்த்தி டி.எம்.எஸ்.க்கு
=======================
****************************
இவன் இருந்த காலம்
இசைக்கு மகுடம்
தமிழ்த்தாயின் கலையவையில்
இரண்டிருக்கை இப்போது
காலியானது
முன்னம் கள்வரி விரலோன்
இன்னம் மதுரக் குரலோன்
கண்மூடி தூங்கிறாயே
விழித்துப்பார்
உன் மேனியெங்கும்
மெய் எழுத்தும்
நெய் எழுத்தும்
தலையில் அடித்து அழுவதை
நிலையில் இடித்து விழுவதை
உழைத்துக் களைத்து
வந்தவரெல்லாம்
வானொலியில்-உன்
தேனொலியில்
சோகம் போக்கி ஆழ்ந்துறங்குவர் அன்று-
சோகத்தை எங்களிடம் விட்டு
நீ ஆழ்ந்துறங்கிறாயே
சோகம் போக்க எங்கே போவோம் இன்று;
ஒரு இசைக்கச்சேரியை
இடையில் நிறுத்திய
இறைவா-
இதயக்காயம் ஆத்த
இனிய டி.எம்.எஸ்ஸ தொட்டெழுப்பு
விரைவா;
ஒப்பந்த காலம் முடிந்து விட்டதோ?
சீக்கிரமாக அழைத்துக்கொண்ட
எமன்
எங்களை விடவா
உன் பாடலின் தீவிர ரசிகன்.
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
காந்தக்குரல் முழங்கினால்-
அந்தச்
சாந்தக்
குன்றுத்தலைவனும்- இனிக்
குமுறுவானோ?
கட்டுமர
மீனவக் குடிசைகளுக்கு
தாலாட்டிய நாக்கு-
மீளாத்துயரத்தில்
எங்களை விட்டுப் போகனும்கிறது
யாரோட வாக்கு.
உம்மைக் காணுகயில்
அனுதினமும் செந்தூரம் பாடும்
திரு நெற்றி-
கண்ணுக்குள் போட்டுக் கொள்கிறதே
சந்தன வில்லைகள்-உன்
சீரடி ஒற்றி;
உனக்கு
போஸ்ட் கார்டு போட்டவரை
மோஸ்ட் பொயட் ஆக்கிவிட்டாய்-
இணக்க
தோஸ்துக்கெல்லாம்
வாஸ்துசொல்லி தூக்கிவிட்டாய்.
எந்த இயக்குநருக்கும்
எந்த நடிகருக்கும்
குரல் ததும்ப இசைவானாய்-
சொந்த உறவுக்கும்
வந்த உறவுக்கும்
குரல் அரும்பியானாய் இசை வானாய்.
எத்தனையோ பேருக்கு
சுரம் கொடுத்தாய்
எத்தனையோ பேருக்கு
வரம் கொடுத்தாய்
கரம் கொடுத்தாய்-
அழுது அழுது
நெஞ்செல்லாம்
நஞ்சாகிப்போச்சு-
உமைபெற
தொழுது தொழுது
காற்றுக்கும் நின்னுட்டது மூச்சு.
மிருதங்கம் கொடுக்கும்
ஓசையிடையே மினுமினுக்கும் தங்கமய்யா-
ஸ்ரீரங்கம் சொடுக்கும் சிலுசிலு மொழியோசைத்
காதோரம் தொங்குமய்யா-
இரண்டு தலைமுறை மனசுகளுக்கு
சுளுக்கெடுத்து பேரெடுத்த
இசை வைத்தியர்-
அசைய வைத்தியர்-
எழவாய் விழுந்து
இசைத்தாயின் நெஞ்சுக்குள்
நெருப்பை வைத்தியர்
இருதயத்தை தைத்தியர்.
நீ
இளசுகளோடு
இணக்கமாகும் மோகமயில்-
பெருசுகளுக்கு
மடியில் கொஞ்சும் சோகக்குயில்.
செம்மொழியான தமிழ்மொழியென
நீ துவக்கிய பாடல் ஒலி-
ஏழேழு காலத்துக்கும்
தமிழர் வாழ்வுத் தேடல் விழி.
உம் குரலில்
சென்றனர் அந்தப்புரம்-
வந்தனர் அதற்கு இந்தப்புரம்-
நீயில்லா இந்தக்கொடுமை
சென்று சொல்வேன் எந்தப்புரம்;
பலர்
வரிகளோடு
பதுங்காத வண்ண அரி-
பலர்
வாகைசூடி மகிழச்செய்வதில்
முன்ன வந்த பரி:
தமிழர் இதயக்கடலில்
எந்நாளும் ஓடும்
வெண்கலக்குரல் ஓடம்-
விஞ்ஞான இசைக்குயில்கள்
நாளும் மறவாமல் பாடும்-நீ
ஏழுசுரத்துக்காகும் பாடம்;

No comments:
Post a Comment