Sunday 2 June 2013

வீட்டுப்பாடம்




வாசலுக்கு வந்து கிடந்தன
வயிறு மெலிந்த
சமையல் பாத்திரங்கள்
அடகு வைத்தவை போக
பூட்டப்படாத வீடு
கழற்றி வீசப்பட்டுக் கிடந்தது
மானத்தை இழந்த வாசல்,
பாத்திரம் தேய்க்கப் போன 
தங்கச்சித் துணிமணிகள்
கொம்பின்றிக் கொடி பிடித்தன
வீட்டு முற்றத்தில்-
மூலையில்  ஒதுங்கி  இருந்தது
அதட்டலுக்கு
அக்காவின் பயம்,
தாய் கோபித்துக்கொண்டுபோனதை
பக்கத்துத் தெருவிலிருந்து
பாட்டி சத்தம்
அசிங்க அசிங்கமா சொன்னது,
எட்டி உதஞ்ச தண்ணீர்க் குடமோ
ஏனோ தானமாய்.
கைலி அவிழ்ந்து கிடந்த
தந்தை அருகில் 
மதுப்பாட்டில் உசாரற்று-
முதுகில் புத்தகப் பாரத்தோடு
பார்க்கும் போது  
நினைவு வந்தது
ஜோதி டீச்சரின் வீட்டுப்பாடம்.

No comments:

Post a Comment